Success!

A big success faces a half a dozen failures...

Monday, January 7, 2013

இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரின் “எந்நாடுடைய இயற்கையே போற்றி”

இயற்கை ஆர்வலர்களில் இந்த இயற்கை விஞ்ஞானிக்கு ஒரு முக்கிய இடமுண்டு. ”எந்நாடுடைய இயற்கையே போற்றி” என்ற இவர் நூலில் நாம் இயற்கை விவசாயம் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய கருத்துகளை எல்லோருக்கும் புரியும் வண்ணம் சுவையோடு எளிதாக எடுத்துரைக்கிறார். பசுமைப் புரட்சி என்ற பெயரில் பயிர்களுக்கு யூரியாவையும் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து போன்ற அவசியமில்லாதவைகளையும் சேர்ப்பது பூச்சிகளோடு மற்ற உயிரினங்களையும் அழிக்கும் என்பதையும் தெளிவாக எடுத்துரைக்கிறார். இவையே நம் உடல் உறுப்புகளில் நோய்களைப் பெருக்கிச் சுற்றுச் சூழலையும் மாசு படுத்துகிறது. தெரியாமல் செய்யும் தவறை விடத் தெரிந்தே அனுமதிக்கும் தவறுகள் மனித வாழ்க்கைகும் இயற்கைகும் மாபெரும் சேதத்தை உண்டு பண்ணுகிறது. கால் நடைகள், தாவரங்கள், மண்ணில் வாழும் பல்லுயிர்கள் இவை யாவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. ஆதிகாலம் தொட்டே நாம் நன்கு அறிந்த விவசாயத்தை ஆராய்ச்சி என்ற பெயரில் ஏறத்தாழ அழித்து விட்டோம். இந்நூல் விவசாயிகளுக்கான நூல் அல்ல. எல்லோரும் படித்துப் பின் பற்ற வேண்டிய பயனுள்ள் விழிப்புணர்வு நூல்!

Saturday, January 5, 2013

பின்னோக்கிப் போவோமா?

மாறி வரும் உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இன்மை, காற்று நிலம் மாசு படுதல், போதிய நிலம் இல்லாமை, செல்பேசியின் அதிகப் பயன்பாடு இவை எல்லாம் நம் சுகாதாரத்திற்கு எதிரிகள். மூன்று தலைமுறைக்கு முன்னால் மூன்று வேளை உணவு இல்லை. பொரித்த உணவு ஏறத்தாழ அறவே இல்லை என்றுதான் கூற வேண்டும். தேங்காயைச் சமைத்துச் சாப்பிட மாட்டர்கள். குழம்பில் தேங்காய் விழுதை ஊற்றுவதாக இருந்தாலும் அடுப்பை அணைத்து விட்டுப் பின் ஊற்றிக் கருவேப்பிலை சேர்த்து இறக்கி விடுவார்கள். கீரை அதிகம் சமைத்துச் சாப்பிட்டார்கள். உருளைக் கிழங்கைக் குறைவாகச் சாப்பிட்டார்கள். சாப்பிட்ட உணவு செரித்து விடும் வாழ்க்கை முறை. நிறைய நடந்தார்கள். தேவையான தூக்கம் தூங்கினார்கள். பிராய்லர் கோழி இல்லை. ஆனால் இவ்வாறெல்லாம் இப்போது வாழ முடியும? ஒரு கட்டத்தில் வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்றாகி விடுகிறதல்லவா? அதாவது மருத்துவர் டையட் எக்ஸர்ஸைஸ், வாக்கிங் என்று கூறும்போது கண்டிப்பாகச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம். அதை ஏன் நம் பழக்கமாகவே ஆக்கிக் கொள்ளக் கூடாது? எல்லோரும் பழைய வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும். மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்!

ஏரிக்கரையில்…

முன்பு வயலாக இருந்த இடஙகளில் இப்போது வீடுகள். மீதமிருப்பது இரண்டு தென்னை மரங்கள். இருபது வருடங்களுக்கு முன்னர் தானாக வளர்ந்த சுரைக்கொடி, சிவப்பாய்ச் சிரித்த செம்பருத்தி,ஓங்கி வளர்ந்த முருங்கை என அழகிய தோட்டம். கால மாற்றத்தினாலும் மனிதர்கள் வாழ இடம் தேவையென்ற கட்டாயத்தினாலும் வீடுகள் அவற்றைச் சுற்றித் தோட்டங்கள் என்றாகி இப்போதோ வீட்டு மொட்டை மாடியில் மட்டும் சில செடிகள். மரங்கள் வைக்க இடம் கேட்டால் மனிதர்களிடம் போராட வேண்டியிருக்கிறது. ஆனாலும் மரங்களை அழித்த குற்ற உணர்ச்சியின் அடையாளமே மொட்டை மாடிச்செடிகள்!

Tuesday, January 1, 2013

2013

எல்லா நாட்களைப் போன்று ஒரு நாள் தானா இன்றும்? புத்தாண்டைக் கொண்டாடலாமா? வேண்டாமா? என்று பல சர்ச்சைகள். என்ன இருந்தாலும் ஆங்கில ஆண்டைத்தானே பின்பற்றுகிறோம் என்று நினைப்பவர்கள். உலகம் அழிந்து விடும் என்று நம்பி இல்லை இன்னும் இருக்கிறது என்று ஆறுதல் அடைந்தோர் சிலர். இவற்றுக்கு மத்தியில் 2013 மலர்ந்திருக்கிறது. வேண்டாம் என்று நினைத்தாலும் சுதந்திரம் கிடைத்தாலும் இங்கிலீஷும் இங்கிலீஷ் காரனும் இல்லாமல் நம்மால் வாழ முடியவில்லை. பழைய ஆண்டு போய் புதிய ஆண்டில் நம்மை நாமே புதிப்பித்துக் கொள்ளும் மனோ நிலை மட்டும் காரணமாய் இருந்தால் சரிதான்